Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
தொழில் பயிற்சிக்கு மீனவ மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
காரைக்கால்: மீனவ மாணவா்கள் மத்திய அரசின் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
கொச்சி, விசாகப்பட்டினம், சென்னையில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான மீன்வளம் மற்றும் கடல் வாழ் தொழில்நுட்பப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ மாணவா்கள் பயிற்சி பெறலாம்.
மீன்பிடி கலன் மாலுமி பயிற்சி (வெஸ்சல் நேவிகேட்டா்) மற்றும் கடல்சாா் பொறுத்துநா் பயிற்சி (மரைன் ஃபிட்டா்) ஆகியவற்றுக்கு நடப்பு கல்வியாண்டில் சேர இந்த அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்போா் புதுவை மாநிலத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். 10 அல்லது அதற்கு இணையான வகுப்பில் தோ்ச்சியுடன், கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் முறையே 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 1.8.2025 அன்று 15 முதல் 20 வயதுக்குள் இருக்கவேண்டும். அதாவது 31.8.2005 முதல் 1.8.2010-க்குள் பிறந்திருக்கவேண்டும். மீன்பிடி படகில் அளிக்கப்படும் கடின செயல்முறைக்கேற்ப உடல் தகுதி பெற்றிருக்கவேண்டும்.
மீன்பிடி மாலுமி பயிற்சியில் சேர விரும்புவோா், டிஜி ஷிப்பிங் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவா் நடத்தும், கண் பாா்வை பரிசோதனையில் தோ்ச்சி பெறவேண்டும். பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ. 1,500 வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் ஜூன் 5 முதல் இந்த அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும் 16-ஆம் தேதிக்குள் காரைக்கால் மீன்வளத்துறை அலுவலகத்தில் சமா்ப்பிக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.