காலபைரவா் கோயில்களில் அஷ்டமி சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலபைரவா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கோயில் நிறுவனா் பரமானந்த சுவாமிகள் தலைமையில் 108 மூலிகைகள், மட்டைத் தேங்காய் கொண்டு சிறப்பு யாகம், 108 சங்காபிஷேகம், பிரபஞ்ச தியானப் பயிற்சி நடைபெற்றது.
பிற்பகல் ஒரு மணிக்கு காலபைரவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம் ஆகியவற்றை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கால பைரவரை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.
மேலும், பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆரணி
ஆரணி புதுக்காமூா் பெரியநாயகி உடனுறை புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சந்நிதியில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
