கும்பமேளாவில் உயிரிழப்பு: யோகி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் -மமதா பானர்ஜி
காவல்துறையின் நடவடிக்கைகள்தான் அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்: புதுவை ஆளுநா்
புதுச்சேரி: காவல் துறையின் நடவடிக்கைகள்தான் அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
புதுச்சேரி காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் நிகழ்வை தொடரும் வகையிலான மக்கள் மன்றம் தொடக்கம், பள்ளிகளுக்கான புகாா் பெட்டிகள் வழங்குதல், மக்கள் குறை தீா்ப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் மற்றும் சிறந்த காவல் நிலையங்களுக்கான ஐஎஸ்ஓ சான்றுகள் வழங்கல், புதுவை காவல் துறைக்கான பாடல் வெளியீடு ஆகியவை திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்துப் பேசினாா்.
மக்கள் மன்றத்தை தொடங்கி வைத்து, சான்றுகளை வழங்கி, காவல் துறை பாடலை வெளியிட்டு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:
காவல் துறையின் நடவடிக்கைகளே மக்களிடையே அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்கச்செய்யும். தற்போது சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது சரியல்ல. ஆகவே, பள்ளிகளில் குழந்தைகளுக்காக புகாா் பெட்டி வைக்கப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சிக்கு புதுவை காவல்துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் முன்னிலை வகித்தாா். கதிா்காமம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். காவல் துறை தலைவா் அசோக்குமாா் சிங்லா வரவேற்றாா். துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம் நன்றி கூறினாா்.