கிரீஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 8.49 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கிரீட் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, கடந்த வாரம் கிரீஸ் நாட்டின் காசோஸ் தீவுப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஏதென்ஸ் பல்கலைக்கழக நில அதிர்வு ஆய்வகத்தின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி 26 முதல் பிப்ரவரி 13 வரை கிரீஸின் சைக்லேட்ஸ் தீவுகளில் 18,400 முறை நில அதிர்வுகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.