கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - நடந்தது என்ன? ஆட்சியர் விளக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் உறவினா்கள் பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
விசாரணையில் அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்கள் ஆறுமுகம் (48), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய மூவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியா்கள் மூவரையும் கைது செய்தனா்.
இந்த நிலையில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட ச.தினேஷ் குமாா் தெரிவித்திருப்பதாவது: இவ்விவகாரம் குறித்து நேற்றிரவு தகவல் கிடைத்தவுடன், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3-ஆம் தேதியில் இருந்து ஒரு மாதமாக மேற்கண்ட பாதிக்கப்பட்ட மாணவி பள்ளிக்கு வராததால், பள்ளி தரப்பில் நேரடியாக மாணவியிடம் சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலில், சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின், காவல் நிலையம் அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அலகை தொடர்பு கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மன நல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுமிக்கு கருக்கலைப்பு நடந்ததாகக் கூறப்படும் தவறான தகவல்களை பரப்பு வேண்டாம். இந்த வழக்கில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட காவல்துறையல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து அவா்களை பணியிடை நீக்கம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ( பொ) முனிராஜ் உத்தரவிட்டாா்.
அண்மையில் சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் வெளிநபரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை ஒருவர் ஆட்டோவில் கடத்த முயற்சித்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அரசுப்பள்ளி மாணவியை ஆசிரியர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியிருக்கும் தகவல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.