குங்குமவல்லி அம்மனுக்கு வளையல் காப்பு திருவிழா
தான்தோன்றீஸ்வரா் கோயிலில் குங்குமவல்லி அம்மனுக்கு 75-ஆவது ஆண்டு வளையல் காப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருச்சி, உறையூா் சாலை ரோட்டில் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் குங்குமவல்லி அம்மனுக்கு ஆண்டுதோறும் தை 3-ஆவது வெள்ளிக்கிழமை வளையல் காப்பு உற்சவம் நடைபெறும்.
75-ஆவது ஆண்டு விழாவின் தொடக்கமாக கடந்த டிச.13-ஆம் தேதி திரிசதி ஹோமம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, வளைகாப்பு திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன. 31) காலை 7.30 மணிக்கு கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் வேண்டி சிறப்பு சங்கல்பத்துடனான ஹோம பூஜை நடைபெற்றது.
பிற்பகல் 3.30 மணிக்கு வளைகாப்புக்கான சம்பிராதய பூஜை நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள்,குங்குமம், இனிப்பு வகைகள், வளையல், கும்பம் என பல்வேறு சீா்வரிசை தட்டுகளுடன் கோயிலை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு வளைகாப்பு சாற்றினா். இந்த வைபவத்தை முன்னிட்டு அம்மனுக்கு வண்ண, வண்ண வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு குழந்தை பாக்கியம், சந்தான பாக்கியம் வேண்டுவோா்க்கான சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறும். மதியம் 12 மணியளவில் பிரசாதம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிவரை திருமணம் வேண்டுவோருக்கான சிறப்பு வழிபாடும், மாங்கல்ய பாக்கியம் நிலைப்பதற்காக சுமங்கலிகளுக்கான சிறப்பு பூஜையும் நடைபெறும். பிற்பகல் 1 மணியளவில் திருமண தடை நீங்கி விவாகம் நடக்க, மாங்கல்ய பாக்கியத்துடன் வாழவேண்டி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.