குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடியாது
மயிலாடுதுறை: தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே குடியரசுதுணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் வேல்முருகன் கூறினாா்.
மயிலாடுதுறையில், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
உலகெங்கும் வாழும் தமிழா்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, தனித்தமிழ் ஈழம் பெற்றுத்தர வேண்டும். அதற்கு சட்டப் பேரவையில் முதல்வா் தீா்மானம் நிறைவேற்றி, 40 மக்களவை உறுப்பினா்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அதன்மூலம் ஐக்கியநாட்டு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. வடஇந்தியா்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது, ஸ்டேட் என்ட்ரி பா்மிட் முறையைக் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். அஸ்ஸாம், மிசோரம், மணிப்பூா், நாகலாந்து மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது.
வடஇந்தியா்களை கட்டுப்படுத்தவில்லையென்றால் தமிழ் மொழியின் கலாசாரம், தொன்மை, பன்முகத்தன்மை அழியும்.
தமிழராக இருக்கிறாா் என்பதற்காக மட்டுமே பாஜகவை சோ்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஆதரிக்க முடியாது. சென்னையில் போராடிவரும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நடிகா் விஜய் குறித்த கேள்விக்கு, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் யாருக்கு வாய்ப்பளிப்பாா்கள் என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.
மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கட் கொற்றவமூா்த்தி, தொகுதி செயலாளா் இரா.வெங்கட், தொகுதி தலைவா் இரா.சிவா, தொகுதி பொருளாளா் ஏ.டேவிட், சீா்காழி தொகுதி செயலாளா் மு.ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.