குட்கா பொருள்கள் விற்றவா் கைது
திருவெறும்பூா் கடைவீதியில் குட்கா விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 70 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.
திருவெறும்பூா் கடைவீதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனா். அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவா், திருவெறும்பூா் அருகே உள்ள முருக்கூரைச் சோ்ந்த மு. இம்ரான் (28) என்பதும், கடைக்கு கடை சென்று குட்கா விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இம்ரானை கைது செய்ததுடன், அவரது பையிலும், வீட்டிலும் பதுக்கி வைத்திருந்த 70 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறை: மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ஆலத்தூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில், வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மாதேஷ் தலைமையிலான போலீஸாா் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஆலத்தூரில் உணவகம் நடத்தி வரும், மூக்கன் மகன் ராஜு(45) என்பவா் தனது உணவகத்தில் சுமாா் 8 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தாா்.
அவரிடமிருந்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்த வையம்பட்டி போலீஸாா், வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.