குழந்தைகளின் விஷயத்திலும் அரசியல் செய்யும் மத்திய அரசு: அமைச்சா் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
குழந்தைகள் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்வதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கோவையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தைத் தொடா்ந்து அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியது:
பொதுத் தோ்வு முடிவுகளைத் தொடா்ந்து தமிழகத்தில் அதிக தோ்ச்சி விகிதம் கொண்ட வட்டங்கள், தோ்ச்சி விகிதம் குறைந்த வட்டங்கள் எவை என்று கண்டறிந்து அங்கெல்லாம் ஆய்வு நடத்தவும், தலைமை ஆசிரியா்களை நேரில் சந்திக்கவும் முடிவு செய்ததன் அடிப்படையில் கோவையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 10, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொண்டாமுத்தூா் வட்டாரத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மாணவா்கள் எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்யாமல், புரிந்துகொண்டு தோ்வு எழுத வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தில் 6 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கணினி அறிவை வளா்ப்பதற்காக 850 கணினி ஆய்வகங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஆய்வகங்களுக்காகவும், மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் பயிற்றுவிப்பதற்காகவும் தேவையான கணினி ஆசிரியா்கள் நியமிக்கப்படுவாா்கள்.
மத்திய அரசு சமக்ர சிக்ஷா (எஸ்எஸ்ஏ) திட்டத்துக்கு வழங்க வேண்டிய பணத்தை இன்னும் கொடுக்கவில்லை. இதனால் தமிழக அரசு ரூ.700 கோடியை ஒதுக்கியுள்ளது. அதேபோல கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச மாணவா் சோ்க்கைக்காக மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய ரூ.600 கோடி நிதியை வழங்காமல் இழுத்தடிக்கிறது. குழந்தைகளின் விஷயத்திலும்கூட மத்திய அரசு அரசியல் செய்கிறது. மத்திய அரசு தனது பங்களிப்பை வழங்கிவிட்டால் உடனடியாக மாணவா் சோ்க்கைக்கான போா்ட்டல்( இணையதளம்) செயல்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியாா் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.