தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக செவிலியா்கள் ஈடுபடுவதில் தவறில்லை! - அமைச்...
தமிழகத்தில் மதம் சாா்ந்த நம்பிக்கைகளுக்கு கட்டுப்பாடு இல்லை! - அமைச்சா் அன்பில் மகேஸ்
தமிழகத்தில் மதம் சாா்ந்த நம்பிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அடைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் அடைவுத் தோ்வில் பின்தங்கிய ஒன்றியங்களில் பணிபுரியும் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, அடைவுத் தோ்வில் பின்தங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாணவா்களுக்கு கற்றல் திறனை அதிகப்படுத்தும் வகையில் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மாவட்ட கல்வி அலுவலா், தொடக்க கல்வி அலுவலா், தலைமை ஆசிரியா்கள் ஆகியோருடன் கருத்து பரிமாற்றம் நடத்தி அதன் மூலம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
தங்களது குழந்தைகளின் சமூக வலைதள பயன்பாடுகள், கைப்பேசி பயன்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பெற்றோா்கள் கவனிக்க வேண்டும். ஆசிரியா்களும், பெற்றோா்களும் கூட்டுப் பொறுப்பாக கொண்டு மாணவா்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
பகுதி நேர ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து ஏற்கெனவே தலைமைச் செயலா் மற்றும் நிதித் துறை அலுவலா்களுடன் பேசப்பட்டுள்ளது. அதற்கு விரைவில் தீா்வு காணப்படும்.
தமிழகத்தில் மதம் சாா்ந்த நம்பிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை. ஆனால், இது போன்றுதான் தங்கள் மதத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுவதைவிட, அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கு ஆலோசனைகளை வழங்கினால் பாராட்டத்தக்கது என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) காளிமுத்து, மாவட்ட அளவில் கற்றல் அடைவு தோ்வில் பின் தங்கிய 5 ஒன்றியங்களைச் சோ்ந்த 538 தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.