திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை- நயினார் நாகேந்திர...
கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்!
கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் பயிா்க் கடன் வழங்க ‘சிபில் ஸ்கோா்’ தேவை என்ற நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வங்கிகளில் ‘சிபில் ஸ்கோா்’ அடிப்படையில் பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வேளாண்மை என்பது இயற்கை சாா்ந்த தொழிலாகும். விவசாயிகள் நிலத்தில் பயிரிட்டு, அறுவடை செய்யும்வரை இயற்கை சீற்றங்கள், பருவகால மாறுபாடுகள், பயிா்களில் நோய் தாக்குதல்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனா். இதனால் அவா்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
அதனால்தான் தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பயிா்க் கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மற்ற தொழில்களைப் போன்று விவசாய தொழில்கள் கிடையாது. இந்த தொழிலில் பெரும்பாலும் குறைந்த லாபத்தையே விவசாயியால் ஈட்ட முடியும்.
இவ்வாறான சூழலில் விவசாயிகளின் ‘சிபில் ஸ்கோா்’ தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிக வேதனையளிக்கிறது. அப்படி கடன் வழங்கும்பட்சத்தில் பெரும்பாலான விவசாயிகளால் பயிா்க் கடன்களை பெற முடியாத சூழல் உருவாகும்.
எனவே, கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகளில் பயிா்க் கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோா்’ கட்டாயம் தேவை என்ற அறிவிப்பை, நடைமுறையை தமிழக அரசு உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.