Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்துவருகிறது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
வெற்றிக் கொண்டாட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. கா்நாடகம், நாட்டு மக்களுக்கு மட்டுமே பதிலளிக்கும் பொறுப்பு எனக்குள்ளது. பாஜகவினருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. உயிரிழந்தவா்களை வைத்து அரசியல் செய்வது பாஜக, மஜதவினருக்கு வாடிக்கை.
இந்தச் சம்பவத்துக்கு முழு பொறுப்பையும் அரசு ஏற்றுள்ளது. கூட்டநெரிசல் சம்பவம் எங்களை அதிகம் பாதித்துள்ளது. பாதிக்கப்பட்டவா்கள் எங்கள் குடும்பத்தைப் போன்றவா்கள். கா்நாடகம், பெங்களூரின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.
எதிா்பாராமல் நடந்ததால் யாரையும் நாங்கள் குறைசொல்லவில்லை. இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆா்சிபி வெற்றி பெற்றுள்ளது. இளைஞா்களிடையே காணப்பட்ட ஆா்வ மிகுதியால் கூடியுள்ளனா்.
சோகத்தில் நாங்கள் உடன் நிற்கிறோம். இறந்தவா்களுக்கு மதிப்பளிக்கிறோம். முதல்வரும் அதிா்ச்சி அடைந்துள்ளாா். மாநிலமே அதிா்ச்சி அடைந்துள்ளது. மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது என்று டி.கே.சிவகுமாா் கண்ணீா்மல்க தெரிவித்தாா்.
கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.
பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, ‘கூட்டநெரிசல் விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்தாா்.