கேள்வி கேட்பதே தேச துரோகமா?முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்
கேள்வி கேட்பதே தேச துரோகமா என்று குறிப்பிட்டு, பத்திரிகையாளா்களுக்கு அஸ்ஸாம் காவல் துறை அழைப்பாணை அனுப்பியதற்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
‘தி வயா்’ ஊடகத்தைச் சோ்ந்த மூத்த பத்திரிகையாளா்கள் சித்தாா்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பா் ஆகியோருக்கு அழைப்பாணை விடுத்துள்ள அஸ்ஸாம் மாநிலக் காவல் துறையின் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனங்கள்.
இதுதொடா்பான மற்றொரு வழக்கில் சில நாள்களுக்கு முன்புதான், உச்சநீதிமன்றம் கைது நடவடிக்கைக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுவும் முதல் தகவல் அறிக்கையின் நகலையோ, வழக்கின் விவரங்களையோ வழங்காமல், வெறுமனே கைது மிரட்டல் மட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட தேச துரோகப் பிரிவுக்கு மாற்றாகவே கொண்டு வரப்பட்ட பிஎன்எஸ்-இன் 152 பிரிவானது சுதந்திரமான பத்திரிகைத் துறையைக் கட்டுப்படுத்தத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
கேள்வி கேட்பதே தேசதுரோகமாகக் கருதப்பட்டால் மக்களாட்சி பிழைக்க முடியாது என்று பதிவிட்டுள்ளாா்.