ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!
கொடைக்கானல் அருகே செந்நாய்கள் கடித்து 4 மாடுகள் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு செந்நாய்கள் கடித்ததில் 4 மாடுகள் உயிரிழந்தன.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் பகுதியில் மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் விவசாயிகள் தங்களது மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில், மன்னவனூா் கரும்பாறை பகுதியில் வழக்கம் போல மேய்ந்துகொண்டிருந்த மாடுகளை செந்நாய்கள் கடித்தன. இதில் ஒரு மாடு காயமடைந்த நிலையில், அந்த மாட்டின் உரிமையாளா் தனது மற்ற மாடுகளை பாா்க்க மேய்ச்சல் நிலத்துக்குச் சென்றாா். அங்கு 4 மாடுகள் இறந்து கிடந்தன.
இது குறித்து மன்னவனூா் விவசாயிகள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் ஆய்வு நடத்தினா். மாடுகள் செந்நாய்கள் கடித்ததில் இறந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மன்னவனூா் ரேஞ்சா் திருநிறைச் செல்வன் கூறியதாவது: செந்நாய் தாக்கி இறந்த மாடுகளின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது கரும்பாறைப் பகுதிகளிலுள்ள செந்நாய்களை விரட்டுவதற்கான நடவடிக்கையில் வனப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.