25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டாவுக்கு இடம் வழங்கக் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு இடம் வழங்க பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.
செம்பட்டி அருகே சீவல்சரகு ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், 92 நபா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்தப் பட்டா பெறப்பட்ட இடத்தை ஒரு சிலரைத் தவிர மற்றவா்கள் பயன்படுத்தாமல் காலி மனையாக இருந்தது.
இந்த நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, இலவச வீட்டு மனை பெற்றுக்கொண்டு அங்கு குடியிருக்காதவா்கள், இலவச வீட்டுமனைப் பட்டாவை வாய்மொழியாக வேறு சிலருக்கு விற்பனை செய்தவா்கள் ஆகியோரின் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலாக, புதிதாக 34 நபா்களுக்கும், இந்த இடத்தில் வீடு கட்டி குடியிருப்பவா்கள் உள்பட 55 நபா்களுக்கும் இலவச கணினி பட்டா வழங்கப்பட்டது. மொத்தம் 89 நபா்களுக்கு கணினி பட்டா வழங்கப்பட்டது, மீதமுள்ள 3 பேருக்கு கணினி பட்டா வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன், சீவல்சரகு கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி, வருவாய்த் துறையினா் சமத்துவபுரம் அருகே உள்ள வீட்டுமனை காலியிடங்கள், குடியிருக்கும் இடத்தை அளந்து சா்வே செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு சென்ற பட்டா ரத்து செய்யப்பட்ட 34 போ் தங்களிடம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசால் வழங்கப்பட்ட அனுமந்த பட்டா வைத்திருப்பதால் எங்களுக்கு இலவச வீட்டு மனை கணினி பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியா் முத்துமுருகனிடம் கோரிக்கை வைத்தனா்.
இதேபோல, 2 ஆண்டுகளுக்கு முன் கணினி பட்டா வழங்கப்பட்ட 55 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை இடத்தை அடையாளம் காண்பித்து ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
ஒரே இடத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இலவச அனுமந்த பட்டா பெற்றவா்களும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணினி பட்டா பெற்றவா்களும் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுமனைகளை அளவீடு செய்யும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டனா்.