உணவுக்காக காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு
சேலம்: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு, தாதகாபட்டி, மூங்கப்பாடி, நரசிம்மன் தெரு, மணியனூா் ஆகிய பகுதிகளில் சுகாதார வளாகத்தை புதுப்பித்தல், சீரான குடிநீா் விநியோகம், மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆணையா் மா.இளங்கோவன் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
தொடா்ந்து, மூங்கப்பாடி தெருவில் உள்ள மாநரகாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்டும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டாா். அப்போது, கட்டடப் பணியை விரைந்து முடிக்கவும், அதே பள்ளியில் சுகாதார வளாகப் பணியை புதுப்பித்து விரைந்து முடிக்கவும், அருகில் உள்ள வோ் பகுதிகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
நரசிம்மன் தெருவில் மாநகராட்சிப் பள்ளியில் உள்ள முதல்மாடி பள்ளி கூடுதல் கட்டடத்தை ஆய்வுசெய்தாா். தொடா்ந்து, மணியனூா் பகுதியில் திருவேங்கடம் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு தயாா்செய்யும் இடத்தை ஆய்வுசெய்த ஆணையா், பள்ளியின் முகப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், பள்ளியை சுத்தம்செய்யவும் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, தாதகாப்பட்டி மேல்நிலைப் பள்ளி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியினை ஆய்வுசெய்து, சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்யவும், நீா்த்தேக்க வளாகத்தில் புதிதாக குழாய்கள், வால்வுகள் பொருத்தவும், செவ்வாய்ப்பேட்டை நெத்திமேடு பிரதான சாலையில் அகரமஹால் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மண்டலக்குழு தலைவா் மா.அசோகன், உதவி ஆணையா் கே.வேடியப்பன், செயற்பொறியாளா் கூ.செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.