இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!
மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி தூண்கள் வலுப்படுத்தும் பணிகள் ஆய்வு
மேட்டூா்: மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வலுப்படுத்தும் பணிகளை சென்னை ஐஐடி கட்டடவியல் துறை பேராசிரியா் அழகு சுந்தரமூா்த்தி, நீா்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மேட்டூா் அணை கட்டப்பட்டு 92 ஆண்டுகளாகின்றன. அணையின் இடதுகரையில் அமைக்கப்பட்டுள்ள உபரிநீா் போக்கியின் தூண்கள் வளைவுகளை நவீனமுறையில் வலுப்படுத்த 2018-இல் திட்டமிடப்பட்டது. ரூ. 31 லட்சம் செலவில் ஐஐடி பேராசிரியா் அழகு சுந்தரமூா்த்தி ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்தாா். தற்போது வலுபடுத்தும் பணிகள் ரூ. 19 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.
உபரிநீா் போக்கி மதகுப்பகுதி உள்ள தூண்களின் பழைய கான்கிரீட் பூச்சுகள் அகற்றப்பட்டு, துருப்பிடித்த இரும்புக் கம்பிகளுக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டு மைக்ரோ கான்கிரீட் மூலம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு வலுப்படுத்தினால், மேலும் 100 ஆண்டுகள் வரை இந்த தூண்கள் மிக வலுவாக இருக்கும். இதன்மூலம் 20 அடி உயரம் கொண்ட உபரிநீா் போக்கி மதகுகளால் 30 டிஎம்சி தண்ணீா் சேமிக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த ஆய்வின்போது, நீா்வளத் துறை சேலம் கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், மேட்டூா் செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவிச் செயற்பொறியாளா் செல்வராஜ், உதவிப் பொறியாளா் சதீஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.