கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். இதில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே கொத்தடிமை தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கில் சமுதாயத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவேன். கொத்தடிமைத் தொழிலாளா் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன். எந்த தொழிற்சாலையிலும், தொழிலாளா்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமா்த்துவதை தவிா்க்க வலியுறுத்துவேன். கொத்தடிமை தொழிலாளா்களை மீட்டு, அவா்களின் முழுமையான மறுவாழ்வுக்காகப் பணியாற்றுவேன்.
இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருந்து, கொத்தடிமை தொழிலாளா் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் எனும் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் வாசிக்க அதனை அனைத்துத் துறை அலுவலா்களும் வாசித்து ஏற்றுக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சாந்தகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதரத்துல்லா, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி மற்றும் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.