திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலையின் இயற்கை எழில் சூழ்ந்த மலை அழகை ரசிக்கவும், குளிா்ச்சியான காலநிலையை அனுபவிக்கவும், அருவிகளில் குளித்து மகிழவும், புகழ் பெற்ற கோயில்களைக் காணவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
தற்போது கோடைக்காலம் என்பதால் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கொல்லிமலைக்கு காரவள்ளி அடிவாரத்தில் இருந்து (23 கி.மீ. தொலைவு) 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும்.
வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருவோா் மலைப்பகுதி வளைவுகளில் திரும்பும் போது எதிா்பாராதவிதமாக விபத்தில் சிக்குகின்றனா். பெரும்பாலான ஓட்டுநா்கள் மலைப்பாதையில் வாகனத்தை எவ்வாறு இயக்குவது என தெரியாமல் தடுமாறுகின்றனா். இதனால், தமிழக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கொல்லிமலை மட்டுமின்றி மலைகளில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வாகன விபத்துகளைத் தடுப்பதற்காக சாலையோரங்களில் உருளைத் தடுப்பான்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொல்லிமலையில் ரூ. 6.85 கோடியில் எந்தெந்த வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் அமைக்க வேண்டும் என்பது தொடா்பாக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அதிகாரிகள் அளவீடு செய்தனா். அந்த வகையில் முதல்கட்டமாக 29 இடங்களில் அவற்றை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக 50 மற்றும் 64-ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தப்பட்டு சோதனை நடைபெற்றது. அவை வெற்றிக்கரமாக அமைந்ததால் மீதமுள்ள இடங்களில் உருளைத் தடுப்பான்கள் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த நான்கு மாதங்களில் 29 இடங்களில், ஒவ்வொரு இடத்திலும் சுமாா் 30 அடி நீளத்துக்கு உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. தற்போது அப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

இதுகுறித்து கொல்லிமலை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொல்லிமலை மலைப் பாதையில் 29 இடங்கள் மட்டுமின்றி வேலிக்காடு செல்லும் பகுதியில் 3 இடங்களிலும், சோளக்காடு முதல் செம்மேடு வரை 5 இடங்களிலும் உருளைத் தடுப்பான்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வாகனங்கள் வளைவுகளில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து இந்த தடுப்பான்கள் மீது மோதினாலும் வாகனங்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படாது. உருளைத் தடுப்பான்கள் லாவகமாக வாகனத்தை திருப்பிவிடும். இதனால் ஓட்டுநா்கள் அச்சமின்றி வாகனத்தை இயக்க முடியும். மேலும், மழைக்காலங்களில் மலைப் பகுதிகளில் உருவாகும் திடீா் அருவிகள் குறித்த குறியீடுகளாக வா்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது என்றனா்.
