கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
மூங்கில்துரைப்பட்டு அருகே விளைநிலப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துரைப்பட்டு அருகே விளைநிலப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில். இங்கு மூங்கில்துரைப்பட்டு அருகே உள்ள மேற்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்த பி.கோவிந்தசாமி (73) பூசாரியாக உள்ளாா்.
இவா் சனிக்கிழமை இரவு சுமாா் 7 மணியளவில் கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கோயிலுக்கு சென்று பாா்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 கிராம் தங்க காசுகள், பணம் ரூ.3,450-ஐ மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனராம்.
இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.