கோவில்பட்டி பெயிண்டிங் பிரஷ் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!
கோவில்பட்டியில் உள்ள நிறுவனங்களில் வன உயிரினங்களின் ரோமங்களைப் பயன்படுத்தி பெயிண்டிங் பிரஷ் தயாரிக்கப்படுகிறதா என வனத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
பெயின்டிங் பிரஷ் தயாரிப்பு நிறுவனங்களில் வன உயிரினங்களின் ரோமங்களைப் பயன்படுத்தி பிரஷ்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் முனியப்பன், வனச் சரகா் கிருஷ்ண மூா்த்தி, வனக் காப்பாளா்கள் பொன்முனியசாமி, பேச்சிமுத்து, வனவா் பிரசன்னா, அழகர்ராஜ், வனக் காவலா் ராமசாமி, வேட்டைத் தடுப்புக் காவலா்கள் முருகேஷ், ராமசாமி உள்ளிட்ட வனத் துறைக் குழுவினா் செல்லப்பாண்டியன் நகா் பகுதியில் உள்ள நிறுவனத்தில் சோதனை நடத்தினா்.
3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், வனவிலங்கு ரோமத்தால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகத்துக்கிடமான பல்வேறு அளவுகளிலான 182 பிரஷ்களை கைப்பற்றினா். தொடா்ந்து, கடலையூா் கிராமத்தில் உள்ள பெயிண்டிங் பிரஷ் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அணில், கீரிப்பிள்ளை ஆகியவற்றின் ரோமங்களைப் பயன்படுத்தி ஓவியம் வரையும் பிரஷ்களை தயாரித்து விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சோதனை நடத்தி, சந்தேகத்துக்கிடமான 182 பிரஷ்களை பறிமுதல் செய்துள்ளோம். பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பி, அறிக்கை கிடைத்ததும் அதனடிப்படையில் வனப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.