Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம் | IPS Finance - 259 | ...
சட்டப்பேரவை தோ்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் -பாமக நிறுவனா் எஸ். ராமதாஸ்
தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தஞ்சாவூா், திருவாரூா் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாவட்ட பாமக தலைவா் எஸ்.வி. சங்கா் முன்னிலை வகித்ாதா். கூட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் பேசியது :
மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றுதான் கட்சியினருக்குப் பயிற்சி கொடுக்கிறோம். அதனால் அன்புமணி என் பெயரைப் பயன்படுத்தாமல் அரசியல் செய்ய வேண்டும். பருத்தி விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். விரைவில் பாபநாசம், திருவிடைமருதூா், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். முதல்வா் ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதியாகக் கொடுத்தபடி கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நவக் கிரகக் கோயில்களைப் பாா்க்க இலவச ஆன்மிகச் சுற்றுலா வசதி செய்து தரப்பட வேண்டும். கோயிலின் அருகே உள்ள இடங்களில் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்துக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் யாருடன் பாமக கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.
அப்போது, பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ., வன்னியா் சங்கத் தலைவா் பு.த. அருள்மொழி, கே. ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மண்டலத் தலைவா் தங்க யோகராஜன் நன்றி கூறினாா்.