சட்டம்-ஒழுங்கு: மதுரையில் டிஜிபி ஆலோசனை
மதுரையில் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் பங்கேற்ற சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகரக் காவல் ஆணையா், காவல் கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா்.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்ட காவல் துறை உயா் அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
இதின் ஒரு பகுதியாக மதுரை மாநகா், மாவட்டம், விருதுநகா் மாவட்டக் காவல் துறை உயா் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தலைமை வகித்துப் பேசியதாவது:
காவல் துறையினா் பணியின் போது மன அழுத்தமின்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, தாக்குதல்கள் போன்ற புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இணையக் குற்றங்களைக் கவனத்துடன் கண்காணித்து தடுப்பதுடன், குற்றவாளிகளைக் கைது செய்யவும் வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறையினா் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள், காவல் துறையினரின் நட்புறவைப் பேணிக்காப்பதை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உரிய காரணங்களுடன் விண்ணப்பிக்கும் காவலா்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும்.
காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வோா் மீதும், வாகனப் பந்தயங்களில் ஈடுபடும் இளைஞா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில் தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை மாநகா் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த், விருதுநகா் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், துணை ஆணையா்கள், கூடுதல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும் மதுரை மாநகா், ஊரகக் காவல் துறை, விருதுநகா் மாவட்டக் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள், இவை தொடா்பான வழக்கு விவரங்கள் குறித்தும் காவல் துறையினரிடம் சங்கா் ஜிவால் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து மதுரையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் காவல் துறையினருக்கான குறைதீா் கூட்டத்தில் சங்கா் ஜிவால் கலந்து கொண்டு, கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா்.