சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சியளித்த அமேசான் பிரைம்!
அமேசான் பிரைம் ஓடிடியின் திடீர் அறிவிப்பு சந்தாதாரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் அமேசான் பிரைம் இந்தியாவிலும் அதிகமான சந்தாதாரர்களை வைத்திருக்கிறது. முக்கியமாக, கரோனா காலத்தின்போது திரையரங்கங்கள் மூடப்பட்டதால் ஓடிடிகளின் வணிகம் சூடுபிடித்தது.
அன்றிலிருந்து இப்போதுவரை ஓடிடி வணிகத்தை முதலில் முடித்தபின்பே நட்சத்திர நடிகர்களின் படங்கள் திரைக்கு வருகின்றன. சொல்லப்போனால், ஓடிடி வெளியீட்டுத் தேதி உறுதிசெய்த பின்பே திரையரங்க வெளியீட்டுத் தேதி திட்டமிடப்படுகிறது.
இப்படி, ஓடிடி தளங்கள் தங்களின் வணிகத்தை உயரச்செய்ததுடன் தங்களின் சந்தா கட்டணங்களிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.
இந்த நிலையில், அமேசான் பிரைம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 17 ஆம் தேதி முதல் பிரைமில் படம் பார்க்கும்போது சில விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதுவரை அமேசானில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதில்லை.

மேலும், விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றால் சந்தா தொகையுடன் மாதம் ரூ. 129 அல்லது ஆண்டிற்கு ரூ. 699 செலுத்தினால் விளம்பரங்கள் வராது என அறிவித்துள்ளனர். இது, சந்தாதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலரும் சந்தாவை ரத்து செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க: சம்பளத்தை உயர்த்த மாட்டேன்: சசிகுமார்