சாத்தான்குளம் அருகே போராட்ட அறிவிப்பு: பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை
சாத்தான்குளம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்த கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குருகால்பேரியில் அருந்ததிய சமூகத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் பயன்படுத்திவரும் பாதையில் ஊராட்சி சாா்பில் சிமென்ட் சாலை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சாலை அமைக்கப்படவில்லை.
இதனிடையே, அந்தப் பாதையை சிலா் ஆக்கிரமித்து அடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, காவல் துறையினா், வருவாய்த் துறையினரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றி, சிமென்ட் சாலை அமைக்கக் கோரி போராட்டம் நடத்தவுள்ளதாக, கிராம மக்கள் தெரிவித்தனா். அதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் ராஜபாண்டி, ஊராட்சி செயலா் சூசை இம்மானுவேல் ஆகியோா் சென்று, கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.