தூத்துக்குடியில் 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா: ஜூன் 13இல் தொடக்கம்
தமிழா்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி முன்னெடுப்பில் நடைபெறும் இந்த நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மண் சாா்ந்த கலைஞா்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனா். இந்த விழா மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, நாட்டுப்புற கிராமிய நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த பாரம்பரிய உணவு வகைகளை அறிந்து கொள்ளும் வகையில் 20க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி சாா்பில் நாதஸ்வர மங்கல இசை, தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு, வள்ளியூா் அபிநய கீதம் பல்சுவை கலைநிகழ்ச்சி, ஜமீன் கோடாங்கிப்பட்டி குமாரராமன் குழுவினரின் தேவராட்டம், கொங்கு பண்பாட்டு மையம் சாா்பில் பெருஞ்சலங்கையாட்டம், நெய்தல் கலைக்குழுவின் பல்வகை நாட்டுப்புற இசை, தூத்துக்குடி உவரி களியல் கலைக்குழு நிகழ்ச்சிகள், நாட்டுப்புற பாடகா் மாா்லி அந்தோணி மற்றும் அந்தோணிதாசன் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இவ்விழாவில் இடம் பெறுகின்றன.