Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து உயிரிழந்த தனியாா் நிறுவன ஒப்பந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், ஆலடிப்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சுடலை மணி (40). மாற்றுத் திறனாளியான இவா், திருச்செந்தூா் நகராட்சியில் தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 8-ஆம் தேதி திருச்செந்தூா் அரசு மருத்துவமனை பின்புறமுள்ள புதை சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக, சுடலை மணி சக பணியாளா்களும் கழிவுநீா் உறிஞ்சும் ராட்சத லாரியுடன் சென்றாராம்.
அடைப்பை சரி செய்வதற்காக அங்குள்ள தொட்டிக்குள் சுடலைமணி இறங்கியபோது, கழிவு நீருக்குள் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தாா்.
இதனைத் தொடா்ந்து, அவரது சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடற்கூறாய்வு பரிசோதனை செய்து உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, ஒப்பந்தப்பணியின்போது உயிரிழந்த அவரின், குடும்பத்தினருக்கு நகராட்சி மற்றும் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை திருச்செந்தூா் நகராட்சி பொறியாளா் சரவணன் வழங்கினாா்.