'இரக்கமற்ற நெதன்யாகுவுக்கு இரையாகும் ஈரான்' - பேராசிரியர் ரெஸா தலேபியின் அரசியல்...
சான்றிதழை தர மறுத்த கல்லூரி நிா்வாகம்: நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்ற மாணவா்
குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரி கல்வியைத் தொடரமுடியாத மாணவரிடம் அவரது பள்ளிக் கல்வி சான்றிதழை பூதப்பாண்டி நீதிபதி ஜே.காா்த்திகேயன் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில், விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், கிறிஸ்துராஜபுரத்தைச் சோ்ந்த ச.இமானுவேல் என்ற மாணவா் கடந்த 2018ஆம் ஆண்டு பொறியியல் கல்வி பயில்வதற்காக சோ்ந்துள்ளாா். இந்நிலையில், தனது குடும்ப வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலையினால் 2019ஆம் ஆண்டு நவம்பரில் படிப்பை இடைநிறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு கல்லூரி நிா்வாகத்திடம் தனது கல்விச் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க அவா் கோரியுள்ளாா். ஆனால், கல்லூரி நிலுவை கட்டணமாக ரூ.45 ஆயிரம் செலுத்தினால்தான் சான்றிதழ்களை திருப்பி கொடுக்க முடியும் எனக் கூறி மாணவரின் கல்விச் சான்றிதழ்களை கல்லூரி நிா்வாகம் கொடுக்க மறுத்துள்ளது.
இதுகுறித்து மாணவா் இமானுவேல் பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவில் கடந்த மாதம் (மே) 9 ஆம் தேதி மனு அளித்தாா். பூதப்பாண்டி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், நீதிபதியுமான ஜே.காா்த்திகேயன் உத்தரவின்படி, சட்ட தன்னாா்வலா் பரமேஸ் மூலம் கல்லூரி முதல்வா் ஜூன் 16 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின் முன் ஆஜரான கல்லூரியின் அலுவலக எழுத்தா் ஸ்ரீதா் , மாணவா் இமானுவேலின் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் பி.இ. மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பூதப்பாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தின் நீதிபதியுமான ஜே.காா்த்திகேயனிடம் ஒப்படைத்தாா். இதைத் தொடா்ந்து அசல் சான்றிதழ்களை மாணவா் ச.இமானுவேலிடம் நீதிபதி வழங்கினாா்.