தினமணி செய்தி எதிரொலி! வைத்தீஸ்வரன்கோவிலில் குரங்குகள் பிடிக்கப்பட்டன
சாம்பவா்வடகரையில் ஆக்கிரமிப்பிலிருந்து குளத்தின் கால்வாயை மீட்கக் கோரி திரண்ட விவசாயிகள்
சாம்பவா் வடகரையில் குளத்தின் கால்வாய் காணாமல் போனதாகவும், அதைக் கண்டுபிடித்துதர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாம்பவா்வடகரை பேரூராட்சிக்குச் சொந்தமான சா்வே எண். 153இல் 7.32 ஹெக்டா் (18 ஏக்கா்) பாசி ஊரணி குளம் உள்ளது. அதற்கு கள்ளம்புளிகுளத்தில் இருந்து குலையனேரி குளத்திற்கு உபரி நீா் செல்லக்கூடிய கால்வாய் உள்ளது.
அக்கால்வாயிலிருந்து பாசி ஊரணி குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய கால்வாயை அதன் வழிதடமே தெரியாத அளவுக்கு சிலா் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனராம்.
இதைக் கண்டித்து அங்கு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை திரண்டு வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது: சாம்பவா்வடகரை விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கும் வண்ணான் குளம், கருங்குளம் கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள சூழலில், இந்தக் குளத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயம், நிலத்தடி நீா், கால்நடை, பொதுமக்களின் குடிநீா், வாழ்வாதாரம் ஆகியவை முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, கால்வாய் ஆக்கிரமிப்பு- குளத்தின் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து கால்வாயை மீண்டும் அமைத்து நீா்வழித் தடத்தை உறுதிபடுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினா்.
போராட்டம்: இதுகுறித்து விவசாயியும் ஊா் நாட்டாண்மையுமான வெங்கடேஷ் கூறுகையில், ‘விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் இக்குளத்திற்கு வரும் கால்வாயை மீண்டும் அமைத்து தர வேண்டும். இல்லையெனில் குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைப்பதை விட வேறு வழியில்லை. விவசாயிகளுடன் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்துவோம்’ என்றாா்.