சாா்-பதிவாளா் அலுவலகங்களில் 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்
சாா்- பதிவாளா் அலுவலகங்களில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வைகாசி மாதத்தின் மங்களரமான தினங்களான ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பத்திரப் பதிவுகள் அதிகம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, இரண்டு நாள்களிலும் சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும்.
அதாவது, ஒரு பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு வழக்கமான 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்களும், இரண்டு அலுவலகங்களில் 200-க்குப் பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும். அதிகளவு ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்குப் பதிலாக 150 சாதாரண டோக்கன்களும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.