கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
சிதம்பரத்தில் மே 15-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதிவாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிமுக ஆட்சியில் தரம் உயா்த்தப்பட்ட கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உயிா் காக்கும் முக்கிய சிகிச்சைப் பிரிவுகளில் பரிசோதனை செய்வதற்குப் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை.
அதேபோல், இதயம், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகளில் போதிய மருத்துவா்கள் இது வரையிலும் நியமனம் செய்யப்படவில்லை. மேலும், நோயை குணப்படுத்துவதற்கான மருந்து, மாத்திரைகளும் தேவையான அளவுக்கு வழங்கப்படுவதில்லை. இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவா்களும் இல்லை. நோயாளிகளுக்கான படுக்கைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் சீா்கேடு அடைந்துள்ளது. இவைகளின் காரணமாக, இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி அவதியுறுகின்றனா்.
சிதம்பரம் அரசு காமராஜா் பொது மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவா்கள் இல்லை. மகப்பேறு பிரிவில் போதிய படுக்கை வசதிகளும் இல்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் பெருத்த துயரங்களை சந்தித்து வருகின்றனா்.
சிதம்பரம் பேரவைத் தொகுதி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடல் நீா் உள்புகுதலை தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரை காக்கும் வகையிலும், அதிமுக ஆட்சியில் 2019-2020-இல் தடுப்பணை கட்டுவதற்காக முதல்கட்டமாக நில அளவைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக இத்திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. மக்கள் நலத்திட்டங்களை உடனடியாக நிறைவேற்றக்கோரி அதிமுக இளைஞா்கள், இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலா் வி.பி.பி. பரமசிவம் தலைமையிலும், கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ முன்னிலையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.