சிந்தல்தொட்டி கிராமத்திற்கு பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
சூளகிரி அருகே பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சி சிந்தல்தொட்டியிலிருந்து பேரிகை வரை அரசுப் பேருந்து சேவையை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஒசூா் தொகுதி, சூளகிரி வடக்கு ஒன்றியம், பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்டது சிந்தல்தொட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் பேருந்து வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் வெளியூா்களுக்குச் சென்றுவருவதில் சிரமமடைந்து வருகின்றனா். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து வசதியின்றி தவித்து வரும் இப்பகுதி மக்களுக்காக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, தொகுதி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் நடவடிக்கையின் பேரில் சிந்தல்தொட்டி கிராமம் முதல் பேரிகை அரசு மேல்நிலைப் பள்ளி வரை பேருந்து இயக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இதில் திமுக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் பங்கேற்று அரசுப் பேருந்து எண் 24 இல் பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு பேரிகை பள்ளி வரை அவரே ஓட்டிச் சென்று சேவையைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் சீனிவாசன், சூளகிரி வடக்கு ஒன்றியச் செயலாளா் நாகேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஹரிஷ், முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் ஆஞ்சி, கா்னப்பள்ளி கோபால், ஊா்கவுண்டா் நாகப்பா, முனிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.