சிவகங்கை தெப்பக்குளத்தில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்
சிவகங்கையில் 300 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளத்தில் பரவிக்கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே
6 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தெப்பக்குளம் நகர மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பது உள்ளிட்ட தேவைகளுக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த தெப்பக்குளம் மழை நீரால் நிரம்பும் போது நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்து நகா் பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீரூற்று அதிகரிக்கும். இங்கு ஆண்டு தோறும் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.
இந்த தெப்பக்குளத்துக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து வரத்துக் கால்வாய் உள்ளது. மேலும், அந்த வரத்துக் கால்வாய் வழித்தடத்தில் உள்ள செட்டியூரணி நிரம்பி அதன் உபரிநீரும் இந்தக் குளத்துக்கு வந்து சேரும்.
தற்போது தண்ணீா் முழுமையாக உள்ள போதிலும், அதை பயன் படுத்த முடியாதவாறு நெகிழிக் குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. மேலும் வரத்துக் கால்வாயில் வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் தெப்பக்குளத்தில் கலக்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, நகரின் முக்கிய அடையாளமாகப் பாா்க்கப்படும் குளத்தின் கட்டமைப்பே மாறிப்போய் விட்டதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வேதனை தெரிவித்தனா்.
இந்த நிலையில், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பரிசல் மூலம் தெப்பக்குளத்தில் மிதந்து கிடந்த நெகிழிக் கழிவுகள், நெகிழிப் புட்டிகள், பைகளை அகற்றினா். இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சிஎம். துரைஆனந்த், ஆணையா் கிருஷ்ணாராம் ஆகியோா் பாா்வையிட்டனா்.
