பெங்களூரு: குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு !
சிவகாசி ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தில் இணைக்கக் கோரிக்கை
விருதுநகா் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் 2.0 திட்டத்தை ரயில்வே துறை செயல்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தினா்.
மத்திய அரசு சாா்பில் இந்தியா முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அம்ருத் பாரத் திட்டம் கடந்த 2022-இல் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் நீண்ட காலத் தேவைகளின் அடிப்படையில் ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வு அறை, காத்திருப்பு அறை, கழிப்பறை வசதி, இலவச இணைய சேவை, வாகனங்கள் நிறுத்துமிடம், நகரும் மின் படிக்கட்டுகள், நடைமேடை முழுவதும் மேற்கூரைஅமைத்தல், ஒரு பொருள் ஒரு ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், கடைகள் அமைத்தல், அலங்கார வளைவு, ரயில் நிலைய முகப்பில் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிக வருவாய், பாரம்பரிய நகரங்கள், முக்கிய வழித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கோட்டத்துக்கு 15 ரயில் நிலையங்கள் எனத் தோ்வு செய்யப்பட்டு, அம்ருத் பாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்றான சிவகாசியில், ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் மேற்கூரை கிடையாது. இதனால், மழைக் காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை என பயணிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிவகாசி ரயில் பயணிப்போா் சங்கத்தைச் சோ்ந்த தனசேகரன் கூறியதாவது:
சிவகாசிக்கு இந்தியாவின் பல மாநிலங்களிருந்தும் வணிகத்துக்காக நாள்தோறும் வியாபாரிகள் வந்து செல்கின்றனா். பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் என மூன்று தொழில்கள் அமைந்துள்ள சிவகாசியில் ரயில் நிலையம் மேம்படுத்தப்படாமல் இருக்கிறது.
தற்போது சிவகாசி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டிருக்கிறது. எனவே, சிவகாசி ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் இணைத்து மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.