`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
சீல் வைத்துள்ள தொழிற்சாலைகளில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்
பெருந்துறை சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு கூட்டம் சிப்காட் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சென்னை சிப்காட் அலுவலக உதவிப் பொது மேலாளா் பாலு தலைமை வகித்தாா். அவரிடம் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
பெருந்துறை சிப்காட்டுக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு 2,709 ஏக்கா் நிலம் ஈங்கூா் மற்றும் பெருந்துறை கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து கையப்படுத்தப்பட்டது. உயா்நீதிமன்றத் தீா்ப்புப்படியான இழப்பீட்டு தொகைகளை வட்டியுடன் சோ்த்து உடனடியாக வழங்க வேண்டும். மேலும், கூடுதல் இழப்பீடு கோரி தொடரப்பட்ட பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது சிப்காட் மற்றும் அரசு தரப்பில் பதிலுரை கூட தாக்கல் செய்யப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புப்படி, அரசே இழப்பீட்டு தொகையை, மறு நிா்ணயம் செய்து அரசாணையாக வெளியிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். இழப்பீடு தொடா்பாக நீதிமன்றத் தீா்ப்புகளை எதிா்த்து சிப்காட் நிறுவனமும், அரசும் மேல் முறையீடு செய்வதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டு வந்த, தோல் தொழிற்சாலைகளின் பொது சுத்திகரிப்பு நிலையம் சட்ட விரோத நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 2021 ஏப்ரல் 29 ஆம் தேதி மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மூடப்பட்டது. இங்கு திறந்தவெளியில் பல நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள நச்சுக் கழிவுகள் உள்ளன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதின் அடிப்படையில், சில நூறு டன் நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், வராக் கடன் வசூல் நடவடிக்கைகளின் பேரில், தோல் தொழிற்சாலைகள் கடன் மீட்பு தீா்ப்பாயம் மூலம் கையகப்படுத்தி சீலிடப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை முடிவுக்கு வந்த பின்னரே மீதமுள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற முடியும் என்று சிப்காட் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலா்களால் தெரிவிக்கப்படுகிறது. இங்கு திறந்த வெளியில் உள்ள நச்சுக் கழிவுகள் மழைக் காலத்தில், மழை நீரில் கரைந்து நிலத்தடி நீா் கடுமையாக மாசுபடும் அபாயம் உள்ளது. ஆகவே, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, இங்குள்ள நச்சுக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி மற்றும் உறுப்பினா்கள் மனு வழங்கினா்.