மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்...
சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட்: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்
சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 11), சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காணவரும் ரசிகா்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும் நோக்கில், போட்டி நடைபெறும் ஒருநாள் மட்டும், ஐபிஎல் போட்டிக்கான நுழைவுச்சீட்டிலுள்ள தனித்துவமான க்யூ-ஆா் குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து, பாா்வையாளா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இச்சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்துக்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) மட்டுமே பயன்படுத்த முடியும். இதன்மூலம் எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இடையே மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகா் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும்.
பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்னதாகவே அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வரவேண்டும். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.