Arjun Das: `2013-லிருந்தே அஜித்சார் என்மீது நம்பிக்கை வச்சார்' - GBU விழாவில் நெ...
ஏக்கருக்கு ஒன்றரை லட்சம்; நிலக்கடலை, எள், ஆமணக்கு.. லாபம் கொடுக்கும் எண்ணெய்வித்து சாகுபடி பயிற்சி
எண்ணெய்வித்து பயிர்களின் சாகுபடி பரப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. ஆனால், எண்ணெய்க்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்து பயன்படுத்தும் நிலையில்தான் இருந்து வருகிறோம். இந்நிலையில் எண்ணெய்வித்து பயிர்களின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கிலும், எண்ணெய் வித்து பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம் லாபம் எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் 'லாபம் கொடுக்கும் எண்ணெய் வித்துகள் சாகுபடி' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

பசுமை விகடன் மற்றும் விழுப்புரம் ரோட்டரி சங்கம் இணைந்து வழங்கும் இந்த ஒருநாள் கருத்தரங்கு, விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபத்தில் ஏப்ரல் 27-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மரச்செக்கு இயந்திரங்களை தயாரிக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த சுபம் இன்ஜினீயரிங் ஒர்க்ஸ், ஆதரவை வழங்கியுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள், ஆமணக்கில் அதிக மகசூல் பெற உதவும் தொழில்நுட்பங்கள், அதைச் சந்தைப்படுத்தும் முறைகள், எண்ணெய், கடலைமிட்டாய், எள்ளுருண்டை என்று மதிப்புக்கூட்டல் பொருள்களாக மாற்றுவதற்கான வழிகாட்டல்களும் கிடைக்கும். வறட்சியான பகுதியில் சாகுபடி செய்ய வேண்டிய எண்ணெய்வித்து ரகங்கள், மதிப்புக் கூட்டலுக்கு ஏற்ற எண்ணெய்வித்து ரகங்கள் ஆகியவை குறித்து திண்டிவனம், எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் எஸ்.திருவரசன் பேச இருக்கிறார்.

தமிழகத்தில் மல்லாட்டை, கல்லக்கா, வேர்க்கடலை எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் நிலக்கடலை, இந்தியாவில் மட்டுமல்ல சீனா, நைஜீரியா போன்ற நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய நிலக்கடலை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக விழுப்புரம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

`நிலக்கடலை சாகுபடியில் என்னுடைய அனுபவம்' என்ற தலைப்பில் பேசுகிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர், முனைவர் நிர்மலகுமாரி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியில் இயற்கை விவசாயத்தில் நிலக்கடலை சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்து வருகிறார். அதுகுறித்தான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரைச் சேர்ந்த வ.சதீஷ் என்ற இளைஞர் நிலக்கடலை, எள்ளைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். இதோடு நிலக்கடலையை இயற்கை முறையில் சாகுபடியும் செய்து வருகிறார். இயற்கையான முறையில் மரச்செக்கு எண்ணெயையும் உற்பத்தி செய்து வருகிறார். மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்ய எவ்வளவு முதலீடு தேவைப்படும், எவ்வளவு இடம் தேவைப்படும், மின் இணைப்பு, மானியம் குறித்தும் பேச இருக்கிறார்.

மரச்செக்கை கொண்டு எண்ணெய் எடுக்கும் முறை பற்றி நேரடி செயல்விளக்கமும் வழங்கப்படும். இந்தக் கருத்தரங்கில் என்னவெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பது குறித்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த நிலக்கடலை விவசாயி சீத்தாராமனிடம் பேசியபோது, “இயற்கை விவசாயத்தில் மண்புழு உரத்தைக் கொண்டு நிலக்கடலையில் மகசூல் அதிகரிப்பதற்கான வழிகாட்டல்கள் கிடைக்கும். நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்ற பட்டம், எங்கே விற்கலாம் என்பது குறித்து என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அறுவடையான பச்சை நிலக்கடலையின் தேவை மற்ற மாநிலங்களில் அதிகமாக உள்ளது. ஒரு கிலோ பச்சை நிலக்கடலை 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இவ்வாறு விற்பனை செய்வதற்கு எந்த வகை நிலக்கடலையை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பேச இருக்கிறேன்.

நன்கு விளைச்சல் கொடுக்கு சரியான நிலக்கடலை ரகத்தை தேர்ந்தெடுத்து முறையான பராமரிப்பை மேற்கொண்டு வந்தால் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும். செலவு போக ஒரு லட்சம் ரூபாய் லாபம் பார்க்க முடியும். அந்தளவுக்கு நிலக்கடலை விவசாயம் விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும். அதுகுறித்தான என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். விவசாயிகளுக்கு இந்தக் கருத்தரங்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று அழைப்பு விடுத்தார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.
கருத்தரங்கில் கலந்துகொள்பவரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணையே தொடர்பு கொள்ளவும்.

நாள்: 27: 04 :2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9:30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை .
இடம்: ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தம், புதுச்சேரி ரோடு, விழுப்புரம்.
(விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர், பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர்).
(கருத்தரங்கில் தேநீர், மதிய உணவு ஆகியவை வழங்கப்படும்)
சிறப்பம்சங்கள்;
-எண்ணெய்வித்து சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள்.
-நிலக்கடலை, ஆமணக்கு மற்றும் எள்ளில் அதிக மகசூல் எடுக்க உதவும் தொழில்நுட்ப முறைகள் .
-நிலக்கடலையில் செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறைகள் நேரடி விளக்கம் .

-இயற்கை விவசாயத்தில் நிலக்கடலை சாகுபடி முறைகள்
-எண்ணெய் வித்துக்களின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான வழிகாட்டல்கள்.
-எண்ணெய்வித்துக்களை சந்தைப்படுத்தும் முறைகள்.
-விதைப்பு முதல் அறுவடை வரை நிலக்கடலை சாகுபடிக்கு உதவும் கருவிகள்.
*அனுமதி இலவசம்; முன்பதிவு அவசியம்.
கருத்தரங்கில் கலந்துகொள்பவரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணையே தொடர்பு கொள்ளவும்.