நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ரா...
பால் உற்பத்தியை அதிகரிக்க `ஊறுகாய் புல்’ - ஆய்வுக்கு இலவசமாக வழங்கும் புதுச்சேரி கால்நடைத் துறை
கறவை பசுக்களுக்கு பசுந்தீவனம்தான் உயிர்த் தீவனம். ஆனால் மேய்ச்சல் நிலம் குறைந்துவிட்ட இந்த காலகட்டத்தில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் தீவனம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அது பால் உற்பத்தியில் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அதனால் புதுச்சேரி விவசாயிகளுக்கு 75% சதவிகித மானியத்துடன் `சைலேஜ்’ எனப்படும் ஊறுகாய் புல்லை வழங்குவதற்கு கால்நடைத்துறை திட்டமிட்டிருக்கிறது. தொடர்ந்து, அதற்கான பரீட்சார்த்த முறை சோதனையை தற்போது துவக்கியிருக்கிறது.

ஊறுகாய் புல்
அதனடிப்படையில் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்திலிருக்கும் தீவனப் பிரிவுக்கு, கூடப்பாக்கம், ராமநாதபுரம், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம், சோம்பேட் மற்றும் டி.என்.பாளையம் பகுதிகளைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களை வரவழைத்தது கால்நடைத்துறை. அங்கு அவர்களுக்கு தலா 50 கிலோ ஊறுகாய் புல் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த விவசாயிகள் தலா ஒரு கறவை பசுவை தேர்வு செய்து, அதற்கு தினம் 10 கிலோ வீதம் 15 நாட்களுக்கு ஊறுகாய் புல்லை கொடுக்க வேண்டும்.
அந்த 15 நாட்களில் பாலின் தரமும், கொழுப்பின் தரமும் கால்நடைத்துறை மற்றும் கூட்டுறவுத் துறையால் ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்துப் பேசிய கால்நடைத்துறையின் இணை இயக்குநர் குமரன், ``சீசனில் அதிகமாக கிடைக்கும் சோளம் மற்றும் பசுந்தீவனங்களை காற்றுப் புகாத முறையில் கலக்க வேண்டும். பின்னர் பசுமை மாறாமல் ஊட்டமேற்றி சேமிக்கும் முறைதான் பதனைத்தாள் என்றும் ஊறுகாய் புல் என்றும் அழைக்கப்படுகிறது.

இதை கால்நடைகளுக்கு கொடுக்கும்போது தரமான பால் கிடைக்கும். பாலின் கொழுப்பு விகிதமும் அதிகமாக இருக்கும். இந்த ஊறுகாய் புல்லில் தாது உப்பு, புரதம், செரிமான ஊட்டச்சத்து மற்றும் கால்சியம் இருப்பதால் மாடுகளின் உடல் நலமும், இனவிருத்தி செயல்திறனும் அதிகரிக்கும். `பேக்கிங்’ செய்யப்பட்ட இந்த ஊறுகாய் புல் ஒராண்டு வரை கெட்டுப் போகாது. அதனால் விவசாயிகள் இதனை வருமான தொழிலாகவும் எடுத்து செய்யலாம். இந்த ஆய்வு முடிந்ததும் 75% சதவிகித மானியத்தில் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும்” என்றார்.