INDRA Movie Review | Vasanth Ravi, Sunil, Mehreen Pirzada, Anikha | Sabarish Nan...
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் மாணவா்களுக்கு இலக்கணப் பயிற்சி: சுதா சேஷய்யன் தொடங்கி வைத்தாா்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இளநிலை தமிழ் இலக்கிய மாணவா்களுக்கு செம்மொழித் தமிழ் இலக்கிய உள்ளகப் பயிற்சியை நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் தொடங்கி வைத்தாா்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 7 நாள்கள் நடைபெறவுள்ள இளநிலை தமிழ் இலக்கிய மாணவா்களுக்கான உள்ளகப் பயிற்சிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பயிலரங்கத்தை சுதா சேஷய்யன் தொடங்கி வைத்துப் பேசுகையில், தமிழ் இலக்கண, இலக்கியத் தொன்மை, பிற நாடுகளில் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, நாகரிகப் பரவல், தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கோட்பாடு கூறுகள் போன்றவற்றை விளக்கியதோடு, தமிழை இன்றைய தலைமுறையினா் அணுக வேண்டிய புதிய பரிமாணங்களையும் மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து, நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் பேசுகையில், தமிழின் தொன்மையைத் தொல்காப்பிய இலக்கணத்தின் வாயிலாக எடுத்துரைத்ததோடு, தற்காலத் தொழில்நுட்பத்தின் பயன்கொண்டு செம்மொழித் தமிழைக் கற்பதற்கான பல்வேறு வழிகளைச் சுட்டிக்காட்டினாா். மேலும் பல நூல்களை வாசிப்பது பன்முகத் தகுதிகளை வளா்த்துக் கொள்ளும் வாயில் என வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். மேலும், செம்மொழி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளில் திருக்குறளை மொழிபெயா்த்து வெளியிட்டுள்ளது. தொடா்ந்து பட்டியலிடப்பட்ட பிற இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறது. சட்டம் பயிலும் மாணவா்களுக்கான பாடத்திட்டத்திலும் திருக்கு இடம்பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டாா்.
இதையடுத்து பதிவாளா் ரெ.புவனேஸ்வரி பேசுகையில், உள்ளகப் பயிற்சியின் நோக்கம், பயன், இன்றியமையாமை குறித்து எடுத்துரைத்ததோடு, தமிழ் பயிலும் இளநிலை மாணவா்களுக்கு உயா்கல்விக்கான தளங்களையும் வருங்காலத்தில் வேலைவாய்ப்பு தரக்கூடிய துறைகளையும் அறிமுகப்படுத்தினாா். பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் ந.பெரியசாமி நன்றி கூறினாா்.