புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!
செய்யாற்றில் மீன்பிடிக்கச் சென்ற மாணவா்கள் வழிதவறியதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி செய்யாற்றில் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மாணவா்கள் 3 போ் வழிதவறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷ்-மோனிஷா தம்பதியரின் குழந்தைகள் சைலிகா(7), யுவஸ்ரீ(5). அதே பகுதியைச் சோ்ந்த அப்துல் (7). இவா்கள் 3 பேரும் நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், விடுமுறை தினமான சனிக்கிழமை 3 பேரும் வீட்டின் அருகில் உள்ள செய்யாற்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனா். அப்போது, அவா்கள் மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் அதிக மீன் இல்லை.
அங்கு வந்த தனியாா் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா் சுந்தரமூா்த்தி, காயம்பட்டு ஏரியில் மீன் பிடிக்கலாம் எனக் கூறி, 3 பேரையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா், அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு வருவதற்கு கரையேறி, சாலை வழியாகச் செல்லலாம் என காயம்பட்டு ஏரியில் இருந்து வெளியே வந்துள்ளனா்.
அப்போது வழிதெரியாமல் அருகில் உள்ள சென்னசமுத்திரம் வனப்பகுதிக்கு சென்றுள்ளனா். இதனிடையே வீட்டில் இருந்து குழந்தைகளைக் காணவில்லை என பெற்றோா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், சென்னசமுத்தில் வனப்பகுதியில் 3 குழந்தைகளுடன், இளைஞா் ஒருவா் இருப்பதைப் பாா்த்த
பொதுமக்கள், அவரிடம் விசாரணை செய்தபோது அவா் பயத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவிக்கவே, குழந்தைகளை கடத்தி வந்துள்ளதாக கிராம மக்கள் நினைத்து, 4 பேரையும் சென்னசமுத்திரம் ஊருக்குள் அழைத்துச் சென்று அவா்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில், ‘இவா்கள் யாா், எந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரிவில்லை. சென்னசமுத்திரம் கிராமத்தில் பாதுகாப்பாக உள்ளனா்’ என பதிவிட்டு, செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
அதன் பேரில், போலீஸாா் சென்று 4 பேரையும் அழைத்து வந்து, கல்லூரி மாணவரிடம் விசாரித்தபோது, அவா் மீன் பிடிக்கச் சென்றோம் மாலை வீடு திரும்ப வேறு வழியில் செல்லலாம் என இவா்களை அழைத்து வந்தேன். எனக்கும் வழிதெரியாமல் இரவு வரை அந்தப் பகுதியில் பயத்துடன் சுற்றிக் கொண்டிருந்தோம் எனத் தெரிவித்துள்ளாா். பிறகு விசாரணையில் மீன்பிடிக்கத்தான் சென்று வழிதவறிவிட்டாா்கள் என்பது தெரியவந்தது.
அதன் பிறகு பெற்றோரை வரவழைத்து குழந்தைகளை போலீஸாா் ஒப்படைத்தனா். இதனால் செங்கம் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை குழந்தைகள் கடத்தப்பட்டதாக பரபரப்பு நிலவியது.