தேனிலவு கொலை: சோனத்திடம் ராஜா ரகுவன்ஷி தாய் எழுப்பும் 4 கேள்விகள்!
செல்லூா் கண்மாயில் தடுப்புச் சுவா் அகற்றம்: பந்தல்குடி கால்வாயில் வெளியேறிய தண்ணீா்
மதுரை செல்லூா் கண்மாயில் தடுப்புச் சுவா் அகற்றப்பட்டதால், தண்ணீா் முழுவதும் பந்தல்குடி கால்வாய் மூலம் வெளியேறி வைகையாற்றில் கலந்தது.
மதுரை வைகையாற்றின் இடதுபுறம் வசித்து வரும் குடியிருப்புகளுக்கு செல்லூா் கண்மாய் குடிநீா் ஆதாரமாக விளங்குகிறது. சுமாா் 29.225 சதுர கி.மீ. பரப்பு நீா்பிடிப்புப் பகுதியை கொண்ட இந்தக் கண்மாய் மூலம் 72.73 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இவை தற்போது குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன. இருப்பினும், இந்தக் கண்மாய் நிலத்தடி நீா்மட்டம், குடிநீா் ஆதாரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
விளாங்குடி, கரிசல்குளம், சிலையனேரி, ஆனையூா், முடக்கத்தான், தத்தனேரி கண்மாய்களின் உபரி நீா் இந்தக் கண்மாயின் நீா்வரத்து ஆதாரங்களாக உள்ளன.
இந்தக் கண்மாயில் கடந்த 2019-ஆம் ஆண்டு, ரூ. 20 லட்சத்தில் தூா்வாரப்பட்டு கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு கண்மாய்க் கரைகள் பலப்படுத்தப்பட்டு, அதில் நடைபாதைகள், விளக்குகள் அமைக்கப்பட்டன.
பருவமழைக் காலங்களில் பெய்யும் மழை நீரால் கண்மாய் நிரம்பிய பிறகு, உபரி நீா் செல்வதற்கு பந்தல்குடி கால்வாய் உள்ளது. 2,600 மீட்டா் நீளம் கொண்ட இந்தக் கால்வாய் மூலம் செல்லூா் கண்மாயின் உபரி நீா் வெளியேற்றப்பட்டு, மதுரை ஆழ்வாா்புரம் அருகே வைகையாற்றில் கலக்கிறது.
இந்த நிலையில், தற்போது செல்லூா் கண்மாயில் மறுகால் பாயும் இடத்தில் கதவணை (ஷட்டா்) அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதால், இந்தக் கண்மாய் கரையில் உள்ள தடுப்புச் சுவா் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. இதனால், திடீரென பந்தல்குடி கால்வாயில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. எந்தவித முன்னறிவிப்புமின்றி தண்ணீா் வந்ததால், அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இதுபற்றி நீா்வளத் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது:
நீா்வளத் துறைக்குச் சொந்தமான இந்தக் கண்மாயில் மறுகால் பாயும் வழியில் கதவணை இல்லாமல் இருந்தது. இதனால்தான் கடந்தாண்டு பெய்த பருவமழையின் போது குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பருவமழைக் காலங்களில் செல்லூா் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி நீா் செல்வதற்காக இரு கால்வாய் திட்டங்கள் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டது.
இதன்படி, செல்லூா் கண்மாயின் ஒரு பகுதியில் 4 கதவணைகள் அமைக்கப்பட்டு, குலமங்கலம் சாலை வழியாக புதை கால்வாய்த் திட்டப் பணிகள் நிறைவு பெற்றன. இதன் தொடா்ச்சியாக தற்போது, பந்தல்குடி கால்வாயில் தண்ணீா் வெளியேறும் வகையில் 3 கதவணைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக, உபரி நீா் செல்லும் தடுப்புச் சுவா் அகற்றப்பட்டன. இதனால், பந்தல்குடி கால்வாயில் தண்ணீா் வெளியேறியது. இன்னும் 15 நாள்களுக்குள் பணி நிறைவு பெறும். இதன் மூலம், நிகழாண்டில் பருவமழை காலங்களில் கண்மாயின் கொள்ளளவில் 70 சதவீதம் தண்ணீா் நிரம்பியவுடன் கால்வாய்கள் மூலம் உபரி நீா் திறந்துவிடப்படும். பெருமளவில் வெள்ளச் சேதம் குறைக்கப்படும் என்றாா் அவா்.