செய்திகள் :

சொல்லப் போனால்... நாய் படும் பாடு!

post image

நாடு விடுதலை பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைய நான்கு நாள்கள் இருக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவொன்று, நம் நாட்டிலுள்ள தெரு நாய்களின் மீதான வன்மத்தை ஒருபுறமும் வாஞ்சையை இன்னொருபுறமுமாகக் கொப்புளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தில்லியிலும் சுற்றியுள்ள புறநகர்களிலும் திரியும் தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் பிடித்து நிரந்தரமாகப் பட்டியில் அடைக்க வேண்டும்; இதற்குத் தேவையான இடவசதிகளைச் செய்ய வேண்டும்; நிர்வாகம் எனக்கென்ன என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது என்றும் தில்லி அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உச்ச நீதிமன்றம் கறாராகக் குறிப்பிட்டிருக்கிறது.

தெருநாய்க் கடிக்குச் சிறார்களும் குழந்தைகளும் ஆளாவதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிமன்றத்தின் முடிவை அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் வழிமொழிந்துள்ளார். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையிலும் ‘சென்டிமென்ட்’களுக்கு வேலையில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாய்களால் கடிபடுகின்றனர். நாட்டின் தலைநகர் தில்லியில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் நாய்களால் கடிபடுகின்றனர்.

வெறிநாய்க் கடியால் நேரிடும் ரேபிஸ் பாதிப்பு காரணமாக எண்ணற்றோர் மரணத்தையும் எதிர்கொள்கின்றனர். ஆனால், இவற்றுக்கெல்லாம் துல்லியமான கணக்கு வழக்கு எங்கேயும் இல்லை.

நம் அரசின் கணக்கின்படி 2022-ல் நாடு முழுவதும் நாய்க் கடியால் ரேபிஸ் தொற்றி நேரிட்ட மரணங்களின் எண்ணிக்கை 21 மட்டுமே. ஆனால், இந்த எண்ணிக்கை சரியானதாக இருக்க முடியாதென சின்னக் குழந்தைக்குக்கூடத் தெரியும். அரசுத்  தரவுகளையும் பிற வட்டாரத் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, இதே 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ரேபிஸால் 305 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உள்ளபடியே இந்தியாவில் 2022-ல் ரேபிஸ் காரணமாக, 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என்றும்  அதே அமைப்பு மதிப்பிடுகிறது.

நமக்குக் கிடைக்கிற கால்நடைகள் துறை அமைச்சகத் தகவல்களின்படி, 2022, 2023, 2024 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிரத்தில் 13.5 லட்சம் பேர்  நாய்க்கடி பட்டிருக்கின்றனர். இரண்டாமிடம் தமிழ்நாட்டுக்கு – 12.9 லட்சம்! நாடு முழுவதுமாக இந்த மூன்றாண்டுகளில் 89.5 லட்சம் பேர் நாய்களால்  கடிபட்டிருக்கின்றனர் (ஆனால், ரேபிஸ் பலி – 125!).

தெருநாய்களின் எண்ணிக்கை (2019 ஆம் ஆண்டுக் கணக்கு) உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகம் – 20.6 லட்சம். ஒடிசா – 17.3 லட்சம், மகாராஷ்டிரம் – 12.8 லட்சம். நல்லவேளையாக இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடத்துக்குள் தமிழ்நாடு இடம் பெறவில்லை.

ஆனால், உண்மையான எண்ணிக்கை என்பது நிச்சயமாக இதைவிட எவ்வளவோ, எத்தனையோ மடங்கு அதிகமாகத்தான் இருக்கும்!

கடைசியாக 2019-ல்தான் நாடு தழுவிய அளவில் விலங்குகள் கணக்கெடுப்பு நடந்திருக்கிறது. இப்போது 2025. ஆறு ஆண்டுகள் தாண்டிவிட்டன. தெருநாய்களின் எண்ணிக்கை எவ்வளவு பெருகியிருக்கும்?

2019 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை 4.4 லட்சம்தான். ஆனால், அதே ஆண்டு மாநிலத்தில் 8.3 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆக, ஒவ்வொரு நாயும் குறைந்தபட்சம் இரண்டு பேரைக் கடித்திருக்க வேண்டும்! இப்படித்தான் இருக்கிறது நம் வசமுள்ள புள்ளிவிவரங்கள் யாவும்!

இப்படியாகப்பட்ட நிலையில், ஒரு கணக்கிற்காக எடுத்துக்கொண்டால் வேர்ல்ட்அட்லஸ் மற்றும் அரசுத் தகவல்களின்படி, இந்தியாவில் 1.53 கோடி தெருநாய்கள் இருக்கின்றன. அதாவது, மக்கள்தொகையில் நூறு பேருக்கு ஒரு நாய் என்பதைவிட சற்று அதிக எண்ணிக்கையில்!   

உச்ச நீதிமன்றம் சொன்னபடியே, தெருநாய்களை எல்லாம் பிடித்துப் பட்டியில் அடைப்பது, பராமரிப்பது என்று முடிவு செய்து செயற்படுத்தினால், நல்லது, தில்லிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்? அனைத்து மாநகரங்களிலும் ஏன், மாநிலங்களிலும் அதே திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்தானே? நாட்டின் எல்லா பகுதிகளிலும்  வசிப்பவர்கள் மக்கள்தானே? எல்லாருடைய உயிர்களும் காக்கப்பட வேண்டியவைதானே?

ஆனால், இந்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் 2023 ஆம் ஆண்டு விலங்குகள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகள், 1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் போன்றவை காட்டும் வழிமுறைகளுக்கும் நிறைய முரண்கள் இருக்கின்றன. இவை தொடர்பான எதையும் அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில், உலகில் வாழும் உரிமை, மனிதர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுவிடவில்லை; எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது. மனிதர்கள் என்பதால் மற்ற உயிர்களையெல்லாம் அழித்தொழித்துவிட முடியாது;  அவ்வாறு அழித்தொழிக்கவும் கூடாது.

நாய்களா, மக்களா என்று வந்தால் சந்தேகமே இல்லாமல் பெரும்பாலான மக்கள்  எல்லாருமே மக்கள் பக்கம்தான் இருப்பார்கள். ஆனால், அதேவேளையில் நாய்களைக் கொன்றுதான் மக்களா என்றால் நிச்சயம் யோசிக்கத்தான் செய்வார்கள்.

ஆக, தீவிரமாகச் சிந்தித்து, எல்லாருமாக விவாதித்து, இந்தத் தெருநாய்கள் விஷயத்தில் எல்லாரும் ஒப்புக்கொள்ளக் கூடிய முடிவுகளை எட்ட இதையொரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் (அதென்ன, தெருநாய்கள்? சென்னையில் பல நேரங்களில் வளர்க்கிற நாய்கள் கடித்தும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே!).

தெருநாய்களை அப்புறப்படுத்துவதைப் பலரும் ஒப்புக்கொண்டாலும்கூட, எப்படி, என்ன செய்யப் போகிறார்கள் என்பதில் தொடங்கி, என்ன செய்ய முடியும் என்பது வரை ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால் தலைசுற்றிவிடும் என்பதில் வியப்பில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தில்லியிலிருந்து நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தும்பட்சத்தில், நீதிமன்றம் சொல்கிறபடி, நாட்டிலுள்ள ஒன்றரை கோடி (உத்தேசமாகத்தான்) நாய்களை எங்கே கொண்டுசென்று அடைத்து வைப்பார்கள்? உணவுக்காக அவற்றுக்கு எவ்வளவு செலவழிப்பார்கள்? யார் செலவழிப்பார்கள்? எங்கிருந்து செலவழிப்பார்கள்? இவற்றுக்கெல்லாம் நாடு முழுவதும் எவ்வளவு பணியாளர்கள் இருப்பார்கள்? இந்த நாய்களுக்கு நலக் குறைவு ஏற்பட்டால்? இவற்றுக்குள்ளேயே ரேபிஸ் பரவினால்... (ஒருவேளை நல வாரியம் போல ஏதேனும் அமைப்பார்களோ?).

இப்படியே இந்த நாய்கள் விஷயத்தை மட்டுமே ஆழ ஆழ, மூழ்கி மூழ்கிப் போய் யோசித்துக்கொண்டே சென்றால், அடடா, என்னவாகக் கற்பனை வளம் ஊற்றெடுத்து பொங்கி அருவியெனப் பிரவகிக்கிறது? என்னென்ன அற்புதமான யோசனைகள் எல்லாம் வெளிப்படுகின்றன?

பிகாரில் சிறப்பு முனைப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் ஆணையத்தின் மீதான வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகள், எத்தனால் கலப்பட பெட்ரோல், டிரம்ப்பின் அதிரடி வரியும் அரசின் அடக்கிவாசிப்பும், ராணுவ விமான வீழ்ச்சி எண்களும், பயங்கரவாதமும் ஆபரேஷன் சிந்தூரும்... என எத்தனையோ பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் வரிசைகட்டிக் கொண்டிருக்க, கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கெழவியைத் தூக்கி மனையில் வை என்கிற மாதிரி, இப்போது தெருநாய்களைப் பற்றி நாடே இரண்டுபட்டு விலாவாரியாக விவாதித்துக் கொண்டிருக்கிறது.

நாய்க் கடியிலிருந்து மக்களைக் காக்க நாய்களைப் பிடித்துப் பட்டியில் அடைப்பதும் உணவளிப்பதும் தங்குமிடங்கள் உருவாக்குவதும் பராமரிப்பதும் என எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது; என்ன, அப்படியே கொஞ்சம் புதுமைப்பித்தன் சொன்ன மாதிரி இந்த அரிசி உணவு தின்னும் பிராணிகளைப் பற்றியும் விசேஷ அக்கறை எடுத்துக்கொண்டு தானாக முன்வந்து ஏதாவது விசாரணை நடத்தி, உண்ண உணவுக்கும் இருக்க இடத்துக்கும் நல்ல விமோசனத்தை ஏற்படுத்தித் தாருங்கள் யுவர் ஹானர்.

இந்த மக்களைப் பற்றிச் சும்மா கொஞ்சமாக நினைத்துப் பார்த்தாலே கிறுகிறுவென்றாகி மயக்கம் வந்துவிடும்.

சரி, எவ்வளவு பேர் இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றால் வழக்கம்போல இவற்றுக்கும் சரியான தரவுகள் கிடைப்பதில்லை. நம்மிடம் இருக்கிற மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கணக்குகளோ அறுதப் பழசான, பத்து, பதினைந்து ஆண்டு காலங்கடந்தவை!  

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (ஃபுட் அன்ட் அக்ரிகல்சர் ஆர்கனைசேஷன்) 2019 - ஆம் ஆண்டுத் தரவுகளின்படி:

_ இந்தியாவில் 14.5 சதவிகித மக்கள் ஊட்டச்சத்துக் கிடைக்காதவர்களாக இருக்கிறார்கள்.

_ 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 36 சதவிகிதம் பேர் எடை குறைவானவர்கள்.

_ 15-க்கும் 49-க்கும் இடைப்பட்ட வயதுப் பெண்களில் 51.4 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

_ யுனிசெப் அறிக்கைப்படி 2018-ல் 5 வயதுக்குக் குறைவான 8.8 லட்சம் குழந்தைகள் பசி, பஞ்சத்தால் இறந்துபோயிருக்கிறார்கள்.

_ ஒவ்வொரு நாளும் 20 கோடிக்கும் அதிகமானோர் பட்டினியாகத்தான் உறங்கச் செல்கின்றனர்.

_ ஒவ்வொரு நாளும் 7000 இந்தியர்கள் பசியால் உயிரிழக்கின்றனர்.

_  ஆண்டுதோறும் பசி, பசி தொடர்பான பிரச்சினைகளால் 25 லட்சம் பேர் இறக்க நேரிடுகின்றனர்.

இவையெல்லாம் பல்வேறு அமைப்புகளின் தரவுகளை வைத்துக்கொண்டு Hindrise என்கிற தொண்டு நிறுவனம் தருகிற விவரங்கள். ஒருவேளை இவை சற்று அதிகமாக  இருப்பதாகத் தோன்றினாலும்கூட இல்லை, இல்லவே இல்லை என்றெல்லாம் யாராலும் சொல்லிவிட முடியாது. எண்களும் சதவிகிதங்களும் வேண்டுமானால் சற்று முன்பின்னாக இருக்கலாம்.

இதேபோலதான் நாட்டில் வீடற்றவர்களின் எண்ணிக்கையும் நிலைமையும்.

2025 ஆம் ஆண்டுக்கணக்கின்படி, நாட்டில் வீடற்றோர் (இருக்க இடமற்றோர்,  வானமே கூரையாக நடைபாதைகளில், வெட்டவெளிகளில் வசிப்போர்) 17.7 லட்சமாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 17 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டாலும், நகர்ப்புறங்களில் வீடற்றோர் எண்ணிக்கை 30 லட்சமாக இருக்கும் என்று மக்கள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

உண்ண உணவுக்கான நிலைமையே இப்படி இருந்தால் உடுத்த உடை நிலைமை எப்படியிருக்கும்?

நாட்டை ஆளும் அரசுகளே முன்வந்து வெளிப்படையாகத் தெரிவிக்காத வரையில் எந்த நாட்டிலும் எந்த நிலவரமும் யாருக்கும் உறுதிபடத் தெரியப் போவதில்லை; மாதம் மும்மாரி பொழிகிறது என்றால் பொழிந்ததாகத்தான் பொருள். முன்னேறிவிட்டது என்றால் முன்னேறியதாகத்தான் அர்த்தம். வேறு வழியே இல்லை. சாமானியர்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

ஆதலால் நியாயமாரே, தாங்களாவது தாமாக முன்வந்து இவற்றையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சரியான தரவுகளைச் சேகரித்து வெளியிடச் செய்து, கடிக்கிற இந்தத் தெருநாய்களுக்கும் மேலான வகையில், மூன்று வேளை உணவுக்கும், வெய்யிலில் காய்ந்து மழையில் நனையாதிருக்கவும் இந்த அரிசி உணவுப் பிராணிகளுக்கும் உத்தரவாதம் பெற்றுத் தர வேண்டும்! (இதில் மாறுபட்ட  இரண்டு கருத்துகளுக்கு இடமிருக்க வாய்ப்பே இல்லை).

தட்ஸ் ஆல், யுவர் ஹானர்!

stray dog care program due to fear of bites and people without food...

இதையும் படிக்க :சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

அல்லோலகல்லோலம் என்றொரு சொல் அவ்வப்போது எங்கேயாவது இதழ்களில் தட்டுப்படும்; ஏதோ கலவரச் சூழல் என்றளவில் பொருள் புரிந்துகொள்ளப்படும். உண்மையிலேயே என்னதான் பொருள் என்று துழாவினால், இணையத்தில் அழையா விருந்த... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

பரபரப்பாகக் கழிந்திருக்கிறது ஒரு வாரம்... பஹல்ஹாம் படுகொலை பற்றி ஒருவழியாக நாடாளுமன்றத்திலும் பேசியாகிவிட்டது; பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றியிருக்கிறார்.ஏதோ இ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஏன், எதற்காக? சொல்லுங்கள் தன்கர்ஜி!

மாநிலங்களவையின் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துகிறார். அவையின் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.மாலை நாலு, நாலரை மணி வரையிலும் வழக்கமான வேலைகள... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்குபெறுவீர்களா? – தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்தக் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த பதில் –... மேலும் பார்க்க