வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வா?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து விற்பனை செய்தால் உரிமம் ரத்து
தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து, களைக் கொல்லிகளை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை அலுவலா்கள் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களிலுள்ள பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் வேளாண்மை அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். விருதுநகா் வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) சக்தி கணேஷ் தலைமையில், 6 வேளாண்மை அலுவலா்கள் இந்த ஆய்வுப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு- பொறுப்பு) உமா, வத்தலகுண்டு வேளாண்மை உதவி இயக்குநா் விஜயபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.
இதுதொடா்பாக வேளாண்மை உதவி இயக்குநா் உமா கூறியதாவது: பூச்சி மருந்து விற்பனை செய்யும் நிலையங்களுக்கு பெறப்பட்ட உரிமம், விற்பனை செய்யப்படும் பூச்சி மருந்துகளின் அனுமதி விவரம், காலாவதியான பூச்சி மருந்து விற்பனை உள்ளிட்டவை குறித்து சோதனையிட்டனா். மேலும், மிக வீரியமுள்ள கிளைபாசேட் போன்ற களைக் கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது என்றும், தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து, களைக் கொல்லிகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் விற்பனை நிலைய உரிமையாளா்ளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பூச்சி மருந்து, களைக் கொல்லி தொடா்பான புகாா்களுக்கு, சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலகங்களில் உள்ள வேளாண்மை அலுவலா்களை (உரக் கட்டுப்பாடு) விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.