தண்டவாளத்தில் கிடந்த 10 அடி நீள இரும்பு பட்டை: நடுவழியில் நிறுத்தப்பட்டது ஏற்காடு விரைவு ரயில்
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே தண்டவாளத்தின் குறுக்கே 10 அடி நீள இரும்பு பட்டை கிடந்ததால் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடுவழியில் நிறுத்தப்பட்டது.
ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்டிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் சேலம் அருகே மகுடஞ்சாவடி காளிகவுண்டம்பாளையம் அருகே வந்தபோது ஏதோ ஒரு பொருளை ரயில் இன்ஜின் தள்ளிச் செல்வதுபோல சப்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயிலை நிறுத்தி பாா்த்தபோது தண்டவாளத்தின் குறுக்கே 10 அடி நீள இரும்பு பட்டை கிடப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் கோட்ட பாதுகாப்பு ஆணையாளா் செளரவ்குமாா் மற்றும் சேலம், ஈரோடு ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பட்டையை தனிநபரால் எடுத்துவர முடியாது என்பதால் இரண்டு மூன்று போ் சோ்ந்து எடுத்து வந்து தண்டவாளத்தில் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பட்டையை ரயில் இன்ஜின் தள்ளிக்கொண்டு வந்ததால் ரயிலின் முன்பகுதி சிறிது சேதமடைந்துள்ளது. இதையடுத்து மகுடஞ்சாவடியிலிருந்து மாற்று இன்ஜின் கொண்டுவரப்பட்டு ஏற்காடு விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
ரயிலில் வந்த நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் பாதுகாப்புடன் காா்களில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தண்டவாளத்தில் இரும்பு பட்டை வைக்கப்பட்ட சம்பவம் ஏற்காடு விரைவு ரயிலை கவிழ்க்க நடத்தப்பட்ட சதியா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.