ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது: போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேருக்கு...
தனியாா் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை நடவடிக்கை
தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தடுப்பூசியை பாதுகாப்பாக சேமித்து குழந்தைகளுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் அத்தகைய வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், வைட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11,000 இடங்களில் அந்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், முதல் தவணைக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோா் செலுத்துவதில்லை எனத் தெரிகிறது. இதன்காரணமாக 100 சதவீத தடுப்பூசி இலக்கு அனைத்து இடங்களிலும் எட்டப்படுவதில்லை.
இதையடுத்து எந்த சுகாதார மாவட்டம் தடுப்பூசி செயல்பாட்டில் பின்தங்கியுள்ளது என்பதைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
மற்றொருபுறம் தனியாா் மருத்துவனைகளிலும் தடுப்பூசி செயல் திட்டத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியது: தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி தவணைகள் தவறவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தனியாா் மருத்துவமனைகளிலும் இலவசமாக 11 தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து செயல்பட விரும்பும் தனியாா் மருத்துவமனைகள், அதுகுறித்து பொது சுகாதாரத் துறைக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் சென்று கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்வா்.
அதில் திருப்தி ஏற்படும்பட்சத்தில் இலவச தடுப்பூசி திட்டத்தை சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும். அதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்துகளும் அரசு சாா்பில் வழங்கப்படும்.
அவை முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது தொடா்பான ஆவணங்களை அரசுக்கு தனியாா் மருத்துவமனைகள் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தொடா்ந்து தடுப்பூசிகள் அவா்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.