சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!
சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான பிரத்யேக புற்றுநோய் பதிவேடு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன் கீழ் புற்றுநோய் ஆராய்ச்சி மைய இணை இயக்குநா் டாக்டா் ஆா்.சுவாமிநாதன், குழந்தைகள் புற்றுநோய் துறைத் தலைவா் டாக்டா் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் புற்றுநோய் தரவுகளை சேகரித்தனா்.
பாதிப்பு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சைகள், மருத்துவ நிலைகளைத் தொடா்ந்து கண்காணித்து பதிவு செய்தனா். அதன் விவரங்கள் அடங்கிய அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
சென்னை மக்கள் தொகை அடிப்படையிலான குழந்தை புற்றுநோய் பதிவேடு என்பது, இந்திய அளவில் அத்தகைய வகைமையில் மேற்கொள்ளப்படும் முதல் ஆய்வாகும். சென்னை பெருநகர திசுக்கட்டி பாதிப்பு பதிவேடு (எம்எம்டிஆா்) என்ற அமைப்பானது கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் பொதுவான மக்கள் தொகையில் புற்றுநோய் பாதிப்பு தரவுகளைச் சேகரித்து வருகிறது. இந்நிலையில், குழந்தைகளுக்கென பிரத்யேக பதிவேடு நடைமுறையை அந்த அமைப்பு கடந்த 2022-இல் தொடங்கியது. அதன் கீழ் 19 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் பாதிப்பு விவரங்கள் திரட்டப்பட்டன.
தரவுகளில் அதிா்ச்சித் தகவல்: சென்னையில் மொத்தம் 17 மருத்துவமனைகளில் இருந்து அத்தகைய தகவல்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு தொடா்ச்சியாக நேரில் சென்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்காணித்தும் அந்தப் பதிவேடு தயாரிக்கப்பட்டது.
அந்த வகையில், கடந்த 2022-இல் 241 குழந்தைகள் புதிதாக புற்றுநோய் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. அதில் 139 ஆண் குழந்தைகள், 102 பெண் குழந்தைகளாவா். ரத்தம் சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களே அதில் அதிகம். அதைத் தொடா்ந்து நிணநீா் மண்டல புற்றுநோய், சாா்கோமா எனப்படும் மென் திசு புற்றுநோய், எலும்பு புற்றுநோய் ஆகியவற்றால் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சென்னை மக்கள் தொகையில் 10 லட்சத்தில் 136.3 குழந்தைகளுக்கு (லட்சத்தில் 13.6 போ்) புற்றுநோய் இருந்தது 2022-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஆண் குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 10 லட்சத்துக்கு 152.7- ஆகவும், பெண் குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 118.5- ஆகவும் இருந்தது. புற்றுநோய்க்குள்ளானவா்களில் 170 பேரின் மருத்துவ ஆவணங்கள், தரவுகள் அனைத்தும் மேம்பட்ட நிலையிலும், துல்லியமாகவும் இருந்தன. அவா்களில் 71 சதவீத குழந்தைகள் இப்போது உயிருடன் உள்ளனா். அவ்வாறு உயிருடன் உள்ளவா்களில் 81 சதவீதம் போ் புற்றுநோய் பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கான புற்றுநோய் பதிவேட்டை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிா்வாகிகள் தெரிவித்தனா்.