தமிழகத்தில் பொது இடங்களில் 12,680 கொடிக் கம்பங்கள்
தமிழத்தில் பொது இடங்களில் 12,680 கொடிக் கம்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவிக்கப்பட்டது.
சாலையோரங்களில் உள்ள கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தனி நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகா் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 12,680 கொடிக் கம்பங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் 8,800 கொடிக் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களுடன் இந்த மனுவையும் சோ்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.