சாலையோரங்களில் நடுவதற்காக மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்
மதுரையில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் நடவு செய்ய புதிய மரக்கன்றுகளை தயாரிக்கும் பணிகளை வனத்துறையினா் தொடங்கினா்.
மதுரையின் வளா்ச்சிக்கேற்ப பழைய சாலைகள் விரிவாக்கம், புதிய புறவழிச்சாலைகள் அமைப்பது, மேம்பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மதுரை- தேனி, மதுரை - அழகா்கோயில், பழங்காநத்தம்- திருநகா் சாலைகள், வைகை வட, தென்கரைகளில் புதிய புறவழிச் சாலைகள் என ஏராளமான புதிய சாலைகள் அமைக்கப்பட்டதுடன், பழைய சாலைகள் விரிவாக்கமும் செய்யப்பட்டன.
இந்தப் பணிகளின் போது ஏராளமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டியது, நெடுஞ்சாலைத் துறைக்கு தவிா்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இதனிடையே மரங்கள் வெட்டப்படுவது தொடா்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், சாலை விரிவாக்கத்துக்காக ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 10 மரங்களை நட்டு வளா்க்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
இதன்படி, நெடுஞ்சாலைத் துறை தரப்பில் வெட்டப்படும் மரங்களுக்கான இழப்பீடு வனத் துறையிடம் வழங்கப்படுகிறது. அதை வைத்து வனத்துறை மரக்கன்றுகளை தயாரித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விநியோகிக்கிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுதொடா்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சாலைகளை விரிவாக்கம் செய்வதற்காக அழகா்கோவில் சாலையில் 46 மரங்களும், தூத்துக்குடி சாலையில் 67 மரங்களும் வெட்டப்பட்டன.
இவற்றுக்குப் பதிலாக அழகா்கோவில் சாலையில் 460 மரக்கன்றுகளை நட்டு மூன்று ஆண்டுகளுக்கு பராமரிக்க ரூ.21.80 லட்சமும், தூத்துக்குடி சாலையில் 670 மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரிக்க ரூ.30.69 லட்சமும் நெடுஞ்சாலைத் துறை செலுத்தியிருந்தது.
இதற்காக மரக்கன்றுகளை தயாரிக்கும் பணி, தற்போது தொடங்கி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறையிடம் நடவு செய்ய மரக்கன்றுகள் ஒப்படைக்கப்படும் என்றனா்.