இந்தியர்களுக்கு கை விலங்கு: `சட்டப்படிதான் அமெரிக்கா நடந்தது, ஆனால்..' -ஜெய்சங்க...
தமிழக ஆளுநர் மௌனமாக இருக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
புது தில்லி: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் மனு மீதான வாதங்கள் தொடங்கும் முன் விரிவாக ஆராய வேண்டிய பிரச்னைகள் குறித்து பட்டியலிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும்? மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் ரவி மௌனமாக இருக்கலாமா? ஆளுநர் மௌனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பதற்கு விடை காண வேண்டும். தமிழக அரசு அனுப்பிய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்பது மாநில அரசுக்கு எவ்வாறு தெரியும்? என உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளது.
மேலும், மனு மீதான வாதங்கள் தொடங்கும் முன் விரிவாக ஆராய வேண்டிய பிரச்னைகள் குறித்து பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கின் விவரம்..
பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் நியமன மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாகவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தது.
தமிழக அரசு சார்பில், மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதங்களை முன் வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்தது.
இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக ஆளுநர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023-இல் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி ஜே.பி. பார்திவாலா, தமிழக அரசின் வாதத்தின்படி அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் அனுப்பியிருக்கக் கூடாது என்கிறார்கள். ஆளுநர் ஏன் மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளார் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என இரு தரப்பையும் கேட்டுக்கொண்டார்.
மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, "அரசமைப்பின் 200-ஆவது விதியின்படி ஆளுநர் செயல்பட்டிருக்க வேண்டும்' என பதிலளித்தார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் ஆர். வெங்கடரமணி, மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரும் விவகாரத்தில் அவர் வசம் தற்போது மசோதா எதுவும் நிலுவையில் இல்லை என்று கூறினார். துணைவேந்தர்கள் விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்படாததால் அதைப் பெற்று விரிவான பதிலைத் தெரிவிப்பதாகவும் தலைமை சட்ட ஆலோசகர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இருதரப்பு வாதங்களை மீண்டும் தொடரும் வகையில் வரும் வியாழக்கிழமைக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், முக்கிய பிரச்னைகளை பட்டியலிடுமாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.