தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?
தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி மதுரை, சென்னையில் நடைபெற்ற போராட்டங்கள் தொடா்பாக திமுகவினருக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:
கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகள் தமிழா்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழா்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரபூா்வமாக மெய்ப்பித்த அகழாய்வுகளாகும். அதனுடைய அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரு ஆண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பி அனுப்பியிருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பாஜக அரசின் அப்பட்டமான தாக்குதல்.
சரஸ்வதி நாகரிகம்: தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பாஜக, இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை. ஆனால், தமிழா் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூா்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட அதனை ஏற்பதற்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு மனம் வரவில்லை. அந்தளவுக்குத் தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்தக் கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது.
அதிமுக வாய் திறக்கவில்லை: அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய பாஜக அரசின் மொழிவெறி - இனவெறி நடவடிக்கை பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்கவில்லை.
தமிழ் மொழி பண்பாடு - தமிழா் பெருமையைப் போற்றிப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் திமுக ஆட்சியில்தான் கீழடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு, அகழாய்வில் கிடைத்த பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களை அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன்
இன்றைய தலைமுறையினா் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் கீழடி அருங்காட்சியகம் திகழ்கிறது.
கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க வலியுறுத்தி, மதுரை, சென்னையில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இது முதல்கட்டப் போராட்டம்தான். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயவே ஓயாது என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.